கடன் அட்டை பயனாளர்களுக்கு அதிர்ச்சி: ஜூலை முதல் வட்டி வீதம் அதிகரிப்பு.

மத்திய வங்கி நடவடிக்கையின் தாக்கம்.

இலங்கையில் எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதங்களை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் 1 முதல் 3 சதவீதம் வரை உயர்த்தத் தீர்மானித்துள்ளன. இந்த நடவடிக்கை நாட்டின் 22 லட்சத்திற்கும் அதிகமான கடன் அட்டை பயனாளர்களை நேரடியாகப் பாதிக்கவுள்ளது.

கடன் அட்டை செலுத்துதல்களில் கூடும் சுமை.

உணவு, போக்குவரத்து, மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக கடன் அட்டைகளில் தங்கியிருக்கும் குடும்பங்கள், புதிய வட்டி உயர்வால் கூடுதல் நிதிச் சுமையை எதிர்கொள்ள நேரிடும் என நிதி ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

வட்டி வீத உயர்வு காரணமாக மாதாந்திர நிலுவைத் தொகைகளை செலுத்தும் செலவு அதிகரிக்கும். இதனால் பலர் தங்களது கடன் சுமையை கட்டுப்படுத்துவதில் சிரமங்களை சந்திக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

194,105 மில்லியன் ரூபாய் நிலுவைக் கடன் பதிவாகியுள்ளது.

சமீபத்தில் இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை ஒரு சதவீதத்தால் உயர்த்தியது. அந்த தீர்மானத்தின் தாக்கத்தைத் தொடர்ந்து வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதங்களையும் உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

தற்போது நடைமுறையில் உள்ள 26 சதவீத வருடாந்திர வட்டி வீதத்தை சில வங்கிகள் ஜூலை 1 முதல் 28 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளன.

இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மொத்த நிலுவைக் கடன் 194,105 மில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது.

Share This Article