உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தற்போதைய அரசாங்கத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் அரசு தயக்கம் காட்டி, அவற்றை திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் நடைபெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
மாகாண சபைகளை மீளச் செயல்படுத்த கோரிக்கை.

மாகாண சபைகள் நாட்டின் நிர்வாக அமைப்பில் முக்கிய பங்காற்றுவதாக சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். மக்களின் பிரச்சினைகள் மற்றும் பிராந்திய தேவைகளை நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளாக மாகாண சபைகள் செயல்படுகின்றன என அவர் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கான தெளிவான காலக்கெடுவை அரசு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தேர்தல் ஒத்திவைப்பை எதிர்த்து எதிர்க்கட்சியின் நடவடிக்கை.

“மாகாண சபைகளை ஒத்திவைக்கும் கோழைத்தனமான அநுரவின் வெறியை தோற்கடிப்போம்” என்ற கருப்பொருளின் கீழ் இந்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் தொடர்ந்து போராடுவதாக சஜித் பிரேமதாச உறுதியளித்தார். மக்களுக்கு தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கிடைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.