நானாட்டான் டிலாசால் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஊடகக் கற்கை ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி மாணவர்களின் பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் இணைந்து இன்று (08) போராட்டம் முன்னெடுத்தனர்.
நானாட்டான் டிலாசால் கல்லூரி அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை முன்பாக நடைபெற்ற இந்த அமைதியான போராட்டத்தில் பலர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். குறித்த ஆசிரியர் பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட காலம் முதல் ஊடகக் கல்வி துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
ஊடகக் கல்வி பின்னடைவு அடைந்ததாக போராட்டக்காரர்கள் கவலை.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், குறித்த ஆசிரியர் பாடசாலை நிர்வாகத்திற்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கும் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதில்லை என குற்றம் சுமத்தினர். மேலும், நிர்வாக நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளிடம் பலமுறை முறைப்பாடுகளை முன்வைத்த போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.
ஆசிரியர் விவகாரத்தில் சமூகத்தின் கவனம் அதிகரிப்பு.

போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன் வருகை தந்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் ஆசிரியரின் இடமாற்றத்தைக் கோரி மனுவொன்றை அவரிடம் கையளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி இரண்டு வாரங்களுக்குள் தீர்வைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.